பேரையூர், மார்ச் 8: டி.கல்லுப்பட்டி அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது காரைக்கேணி. இந்த கிராமத்தில் ஏற்கனவே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த நிலையில் இதே கிராமத்தில் புதியதாக மேலும் ஒரு டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தகவலறிந்த காரைக்கேணி கிராமத்து பெண்கள் புதிதாக டாஸ்மாக் கடை திறக்ககூடாது என்றும், ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என டி.கல்லுப்பட்டி காவல் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட மினி வேனில் வந்தனர்.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெண்கள் கூறும்போது, ‘ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதிக்குள் உள்ளது. இந்த பகுதியில் புதியதாக குடியிருப்பு வீடுகள் அதிகமாக உருவாகி வருகிறது. இந்த சாலையில் காரைக்கேணி, மங்கம்மாள்புரத்திலிருந்து மாணவிகள் சைக்கிள்களிலிலும், நடந்து சென்றும் வருகின்றனர். இதில் டாஸ்மாக்கில் குடித்து விட்டு டூவீலரில் வருபவர்கள் போதையில் மாணவிகள் மற்றும் பெண்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்துகின்றனர். பெண்கள் தனியாக ஸ்கூட்டி மற்றும் சைக்கிளில் வரும்போது குடித்து விட்டு போதையில் லிப்ட் கொடு என வழிமறித்து வம்பு செய்கின்றனர்.