மன்னார்குடி, மார்ச் 7: பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உடன் பணி வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மன்னார்குடி நுகர்பொருள் வாணிப கழகம் முன்பு டிஎன்சிஎஸ்சி சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நெல்மூட்டைகள் இயக்க செய்யப்படாத அவலநிலை நீடிப்பதால் தேவையான இடங்களில் திறந்தவெளி சேமிப்பு நிலையங்களை ஏற்படுத்தி நாள் ஒன்றுக்கு இரண்டு தவணையாக ரயில் தலைப்பு இயக்கத்தை அமல்படுத்த வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் எப்சிஐக்கு இணையான கூலி வழங்க வேண்டும். மேலும் அதனை உடனுக்குடன் அளித்திட வேண்டும்.