ஊட்டி, மார்ச் 6: முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் சுமார் 95 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதிகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி முதுமலை புலிகள் காப்பக எல்லையோரத்தில் அமைந்துள்ள கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீ முதுமலை புலிகள் காப்பக வனத்திற்குள்ளும் பரவியது. நேற்று தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநில எல்லையோர வனத்தில் தீ எரிந்தது. இதை முதுமலை உள் மண்டல துணை இயக்குநர் செண்பகபிரியா தலைமையிலான வனத்துறையினர் கவுன்டர் பயர் முறையில் தீயை அணைத்தனர். காட்டு தீயை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உள் மண்டல பகுதியில் லேண்டானா, பார்த்தீனியம் போன்ற களை செடிகள் மற்றும் புல்வெளிகள் என சுமார் 25 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து சேதமடைந்தது வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதேபோல் முதுமலை வெளி மண்டல பகுதிக்குட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், ஆச்சக்கரை, சிங்காரா, மாவனல்லா, மன்றாடியார், குரும்பர்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மர்மநபர்கள் வனத்திற்கு தீ வைத்ததில் சுமார் 70 ஹெக்டர் பரப்பளவிலான புல்வெளிகள் எாிந்து நாசமானது.