தண்டராம்பட்டு, மார்ச் 6: தண்டராம்பட்டு அருகே இருதரப்பினர் மோதலில் எஸ்ஐ, போலீஸ்காரர் காயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பழையனூர் ஊராட்சி அத்திப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். திருவண்ணாமலை ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணை செயலாளராக உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் திமுக ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மைத்துனர் மஞ்சுநாதன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு தமிழக அரசு சார்பில் பசுமை வீட்டிற்கான ஆணை வழங்கப்பட்டது. இதையறிந்த சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜனிடம் சென்று, திமுகவை சேர்ந்தவருக்கு பசுமை வீடு வழங்கக்கூடாது எனக்கூறி அந்த அரசாணையை ரத்து செய்தாராம். இதுதொடர்பாக அவருக்கும், பழனி, மஞ்சுநாதனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி தனது கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் அமைக்கப்படும் ஜல்லி சாலைக்கான பூமி பூஜையை சுப்பிரமணியன் தொடங்கினார். அப்போது அங்கு சென்ற மஞ்சுநாதன், ‘எனக்கு வீடு கொடுக்காமல் ரத்து செய்தாய். நீ எப்படி சாலை அமைக்கலாம்’ எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தாராம். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மஞ்சுநாதன் சுப்பிரமணியனை தாக்கினாராம். படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.