பெரம்பலூர், மார்ச் 1: நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தாசில்தார்களும் வெளி மாவட்டத்திற்கு பணிமாற்ற செய்யப்படுவதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று (1ம்தேதி) உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படுமென அறிவித்துள்ளனர். நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, தமிழக அளவில் 270 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 4 தாலுகா அலுவலகங்களில் பணிபுரிந்த பாரதிவளவன், ஷாஜஹான், கவிதா, சித்ரா ஆகிய 4 ரெகுலர் தாசில்தார்களும் அரியலூர் மாவட்டத்திற்கு கடந்த 27ம்தேதியே பணிமாற்றம் செய்யப்பட்டனர். அரசின் இச்செயலைக் கண்டித்தும், கைவிடக் கோரியும் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் பாரதிவளவன் தலைமை வகித்தார்.