செம்பட்டி, பிப். 28: நிலக்கோட்டை பகுதியில் ரூ.2 ஆயிரம் வாங்குவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணிக்கு ரூ.100 கட்டாய வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு வறுமைக்கோட்டு பட்டியலில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 19 98, 2003, 2005ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் அடிப்படையில் மனுக்களை வாங்கி வந்தனர். இதில் வசதி படைத்தவர்கள் இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களாக பொதுமக்களிடம் புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில்தான் தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த கணக்கெடுக்கும் பணியில் அந்தெந்த ஊராட்சி மன்ற செயலாளர்கள்தான் ஈடுபட வேண்டும். ஆனால் அவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டமான 100 நாள் வேலை செய்யும் பணிதள பொறுப்பாளர்களை வைத்து கணக்கெடுத்து வருகின்றனர்.