தஞ்சை, பிப். 28: நான்கு சாலை விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 45.23 லட்சம் நஷ்டஈடு வழங்க தஞ்சை கோர்ட் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த விவசாயி சுரேஷ் (30). இவர் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி திருவோணம் வெட்டிக்காடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைதொடர்ந்து, சுரேஷ் இறப்புக்கு நஷ்டஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன விபத்து கோருரிமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணஜெயஆனந்த் 14,23,800 நஷ்டஈடாக வழங்க தஞ்சை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்களத்தூரை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (62). இவர் 2017ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி காரில் வந்தார். தஞ்சை அருகே சக்கரசாமந்தம் என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக வந்த வேன் மோதியது. இதில் கேசவமூர்த்தி பலியானார். இவரது இறப்புக்கு நஷ்டஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன விபத்து கோருரிமை தீர்ப்பாய நீதிமன்றத்தில் கேசவமூர்த்தி குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 7,58,696 நஷ்டஈடு வழங்க தஞ்சை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு உத்தரவிட்டார்.