கரூர், பிப். 27: கரூர் மாவட்டம் புலியூர் அருகே கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வடிகால் பாலம் கட்டும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். கரூரில் இருந்து திருச்சி, மணப்பாறை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், பிற வாகனங்களும் புலியூர் வழியாக வீரராக்கியம் பிரிவு அருகேயுள்ள திருச்சி பைபாஸ் சாலையில் சென்று பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இதே போல் திருச்சியில் இருந்து கரூர், கோவை போன்ற பகுதிகளுககு செல்லும் அனைத்து பேருந்துகளும் புலியூர் வழியாகத்தான் கரூர் சென்று பிற பகுதிகளுக்கு செல்கின்றன. இந்நிலையில் புலியூர் பகுதியை தாண்டியதும் தனியார் சிமெண்ட் ஆலை எதிரே வடிகால் பாலம் செல்கிறது. இந்த பழைய வடிகால் பாலம் சிதிலடைந்ததால் புதிதாக இதன் அருகிலேயே வடிகால் பாலம் கட்டும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு துவக்கப்பட்டது.