திருச்சி, பிப்.26: பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை வங்கிகளில் விவசாயிகள் அடகு வைத்துள்ள நகைகளையும், நிலங்களையும் ஏலம் விடக்கூடாது என்று திருச்சி கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வடகரை வாய்க்காலின் தலைப்பில் கொரம்பு கட்டி, கோடைக்காலத்தில் வாழை, கரும்பு பயி்ர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை விவசாயிகள் வங்கிகளில் அடகு வைத்துள்ள நகைகளை ஏலம் விடாமலும், நிலங்களை ஏலம் விடாமல் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். திருச்சி தென்னூர், அண்ணாநகர், கண்ணதாசன் சாலையில் உள்ள சிஎஸ்ஐ தொழிற் பயிற்சி பள்ளி நிறுவன தாளாளர் பிரிசில்லா பிரான்சிஸ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சிஎஸ்ஐ தொழிற் கல்வி பயிற்சி மையம் ரமேஷ்பாபு என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், வாடகை சரியாக தரவில்லை எனுக்கூறி கடந்த 3ம் தேதி இரவு மையத்தின் பூட்டை உடைத்து அனைத்து பொருட்கள், இயந்திரங்கள், 49 மாணவ, மாணவிகளின் அசல் சான்றிதழ்களை திருடிச்சென்றதுடன் மையத்தையும் பூட்டி விட்டனர். துணை கமிஷனர் நிஷா உத்தரவின் பேரில் ரங்கம் உதவி ஆணையர் விசாரணையில் பயிற்சி மைய பொருட்களை எடுத்ததை ஒப்புக்கொண்டார். சேதாரமின்றி அவற்றை ஒப்படைப்பதாகவும், முன்பணம் ரூ.1 லட்சத்தில் 3 மாத வாடகை போக மீதி பணத்தை கொடுப்பதாகவும், எழுதிக் கொடுத்தார். ஆனால் 20 பேர் சான்றிதழ் மட்டுமே கொடுத்துள்ளார். மீதி 26 சான்றிதழ்களை வழங்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே சான்றுகளையும், ஆவணங்களையும் பெற்றுத்தர வேண்டும்’ எனக்குறிப்பிட்டுள்ளார்.