திருச்சி, பிப்.22: திருச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் கர்ப்பிணிக்கு பெண் சிசு இறந்து பிறந்தது. அதனை அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே வீசிவிட்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் முகப்பு பகுதியில் தீவிர சிசு மற்றும் தாய் சேய் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் திருச்சி மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்கள் வருகின்றனர். இதில் தினமும் குறைந்தது 25க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.இந்நிலையில் சமயபுரத்தை சேர்ந்த இளம்பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்றுமுன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது, அவருக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது. இது குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவித்து இறந்த சிசுவை ஒப்படைத்தனர். சிசுவை வாங்கிய உறவினர்கள், அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடம் முன் இருந்த பெரியார் சிலை அருகே சிசுவை வீசிச் சென்றனர். இதற்கிடையில் மயக்க நிலையில் இருந்த தாயை வார்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பெரியார் சிலை அருகே வீசிச் சென்ற சிசுவை நேற்று காலை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் பெண் சிசு இறந்தே பிறந்ததும், அதனின் தாய் தலைமறைவானதாக டாக்டர்கள் கூறினர். ஆனாலும் சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.