சென்னை, பிப்.19: திருமண நிகழ்ச்சிக்கு பைக்கில் சென்றபோது, மினி லோடு வேன் மோதியதில் தாத்தா, பேரன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வந்தவாசியை சேர்ந்தவர் குப்புசாமி (45). இவரது மனைவி லட்சுமி (37). இவர்களது பேரன் பரசுராமன் (3). திருவள்ளூர் அருகே உள்ள கவரப்பேட்டையில் உறவினரின் திருமண நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக குப்புசாமி, லட்சுமி நேற்று காலை பைக்கில் புறப்பட்டனர். குழந்தை பரசுராமனையும் அழைத்து சென்றனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வடமங்கலம் கூட்டு சாலையில் சென்றபோது, விதிமுறைக்கு மாறாக எதிர் திசையில் வேகமாக வந்த மினி லோடு வேன், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர்.