வேலூர், பிப்.14:மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் கணினி ஆபரேட்டர்களை இளநிலை உதவியாளர்களாக பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் கடந்த 2005ம் ஆண்டு மே 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு வருவாய் நிதி ஆண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடல் உழைப்பு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு ₹133ல் இருந்து ₹214 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. மேலும் இத்திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆன்லைன் மயமாக்கப்பட்டு பயனாளிகளுக்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் நேரிடையாக செலுத்தப்படுகிறது. மேலும் அவர்கள் ெசய்யும் வேலை, பணி செய்யும் நாட்கள் என அனைத்து நடவடிக்கைகளும் கணினியில் பதிவேற்றப்படுகிறது.