கூடுவாஞ்சேரி, பிப்.8:கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் நெல்லிக்குப்பம் ரோடு, கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (40). பிரபல ரவுடி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கண்ணன் மீது கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மறைமலை நகர் உள்பட பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் கண்ணன், அடிக்கடி சிறை செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை கண்ணன், நந்திவரம் திருநாராயணபுரம் சுடுகாட்டு - குளக்கரை இடையில் உள்ள ஒத்தையடி பாதையில் தலை, கழுத்து, கை, கால்கள் உள்பட உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், நேற்று மதியம் கண்ணன், தனது நண்பர்கள் 4 பேருடன்,நந்திவரம் ெபட்ரோல் பங்க் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மாலை வரை, 5 பேரும் மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது.பின்னர் மீண்டும் மது பாட்டில்களை வாங்கி கொண்டு, மேற்கண்ட பகுதிக்கு சென்றனர். அங்கு அனைவரும் மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள், தகராறு ஏற்பட்டு அதில் கண்ணனை வெட்டி கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.