நாகர்கோவில், பிப்.7: 3 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.குமரி மாவட்ட தொலை தொடர்பு துறையில் 300 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். நாளொன்றுக்கு இவர்களுக்கு ₹460 சம்பளம் ஆகும். மாதத்தில் 26 நாட்கள் வேலை உண்டு. இந்த தொழிலாளர்கள் தான் பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், கேபிள் பதிப்பு, டவர் நடுதல், பராமரிப்பு, வாடிக்கையாளர் சேவை மைய பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்கள். இந்த பணியாளர்களுக்கு கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாத சம்பளம் இன்னும் வழங்கப்பட வில்லை. இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிர்வாகத்திடம் கேட்ட போது நிதி பற்றாக்குறை இருப்பதால், இப்போதைக்கு சம்பளம் வழங்க முடியாது என கூறி உள்ளனர். இதை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்ககோரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நேற்று குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ், தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.