தக்கலை, பிப். 7: தக்கலையில் மேம்பாலம் அமைவதை கண்டித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தக்கலையில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. வரும் 19ம் தேதி குமரி வரும் பிரதமர் மோடி இதற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஆனால் தக்கலையில் மேம்பாலம் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேம்பாலம் அமைக்காமல் ஆக்ரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மேம்பால திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் தக்கலையில் வணிகர்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று தக்கலை நகர வர்த்தகர் சங்கம், அனைத்து கட்சிகள், பொதுமக்கள் இணைந்து தக்கலை தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். பிரின்ஸ் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ பேசியதாவது: மக்களுக்காக தான் அரசு செயல்பட வேண்டும். ஆனால் மக்கள் நலனுக்கு எதிரான அரசாக உள்ளது. மக்கள் நலன் பாதிக்காத வகையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இன்றைக்கு அப்படியா நடக்கிறது. நான்கு வழிச்சாலைக்காக கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. வணிகர்களை அழிக்கும் திட்டமாக மேம்பால திட்டம் உள்ளது. தக்கலையில் மேம்பாலம் தேவையில்லை என நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தின் போது நாங்கள் மூன்று எம்எல்ஏக்களும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என்றார்.