வேலூர், பிப்.6: காட்பாடி அருகே திருடன் என நினைத்து வடமாநில வாலிபரை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதில் வாலிபர் இறந்தார்.வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கொசவன்புதூர் கிராமத்தில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர், கலாநந்தன்(60) என்பவது வீட்டின் கதவை தட்டினர். இதையடுத்து கலாநந்தன் கதவை திறந்த போது, அந்த கும்பல் கதவை வேகமாக தள்ள முயன்றனர்.
இதில் சுதாரித்த கலாநந்தன் கதவை வேகமாக பூட்டினார். பின்னர் வந்தவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் செல்போன் மூலம் அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கலாநந்தன் வீட்டிற்கு அருகே பொதுமக்கள் திரண்டனர். அவர்களை பார்த்தும் அங்கிருந்த கும்பல் தப்பியோடியது.அவர்களை விரட்டி சென்ற கிராம மக்கள் அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற 3 பேர் தப்பியோடினர். பின்னர் பிடிபட்டவரை அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். வலி தாங்க முடியாத அந்த நபர் அலறினார். ஆனால் அவர் இந்தியில் பேசியதால் பொதுமக்களுக்கு புரியவில்லையாம். இதற்கிடையில் கடுமையாக தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த அந்த நபர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இறந்தவரின் உடலை அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் பொதுமக்கள் தூக்கி வீசினர்.