கருங்கல், பிப். 1: குழித்துறையில் மகாத்மா காந்தி நினைவு நாளில் தனியார் சொகுசு ஓட்டல் பாரில் மது விற்பனை செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி ஜனவரி 30ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மதுகடைகள், மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்களில் செயல்படும் மது பார்கள் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அனைத்து அரசு மதுக்கடைகளும் மூடப்பட்டன.ஆனால் ஒரு சில இடங்களில் தனியார் பார்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்தது. குழித்துறை தீயணைப்பு நிலையம் அருகே தாமிரபரணி ஆற்றையொட்டி மதுபார் வசதியுடன் சொகுசு ஓட்டல் செயல்படுகிறது. இந்த பாரில் நேற்று முன்தினம் மது விற்பனை நடந்ததாக தெரிகிறது. இந்த தகவல் மதுபிரியர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து ஏராளமான குடிமகன்கள் கார்களிலும், பைக்குகளிலும் ஓட்டலில் குவிந்தனர்.வழக்கத்திற்கு மாறாக அதிகபடியான கார்களும், பைக்குகளும் வந்து சென்றதால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.