டாஸ்மாக் ஊழியர் வீட்டில் நகை,பணம் கிடைக்காததால் தீ வைத்த கொள்ளையர்கள்

பொள்ளாச்சி,  ஜன.25:பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க வந்த மர்ம  நபர்கள் நகை,பணம் எதுவும் கிடைக்காததால் வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பினர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள அருள்  ஜோதிநகர் பகுதியை சேர்ந்தவர் குமார்(44).இவர் கருமத்தம்பட்டியில் டாஸ்மாக்  கடையில் சூபர்வைசராக பணியாற்றி வருகிறார். சரவணம்பட்டியில் வசிக்கும்  குமார், விடுமுறை நாட்கள் மற்றும் அவ்வப்போது அருள்ஜோதி நகர் வீட்டுக்கு வந்து தங்கி செல்வதை வழக்கமாக  கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில்  அருள்ஜோதிநகரில் உள்ள குமாரின் வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை  அப்பகுதியினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு  குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, ஏற்கனவே வீட்டின் முன்கதவு  திறந்திருந்த பகுதி வழியாக சென்று சுமார் ஒரு மணி நேரத்தில் தீயை மேலும்  பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த மேஜை, பீரோ, கட்டில்,  படுக்கை விரிப்பு, துணிகள், பாத்திரங்கள் மற்றும் மரச்சாமான்கள் உள்ளிட்ட  வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் தீக்கிரையானது. விபத்து குறித்து பல  மணிநேரத்திற்கு பிறகு, தகவலறிந்த கிழக்கு போலீசார், சம்பவ இடத்துக்கு  விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், குமாரின் வீட்டில் ஆட்கள்  இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் சிலர், கதவை உடைத்து கொள்ளையடிக்க  முயன்றுள்ளனர். வீடு முழுக்க தேடி பார்த்தும் பணம்,நகைகள் எதுவும்  கிடைக்கவில்லை. ஆத்திரமடைந்த மர்மநபர்கள், தடயத்தை அழிப்பதற்காக குமாரின்  வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பியோடி இருக்கலாம் என போலீசார்  தெரிவித்தனர். இருப்பினும், முன் விரோதத்தில் யாரேனும் தீ வைத்து  விட்டு தப்பினார்களா என்றும், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: