திருச்சி, ஜன.23: வயலூர் முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முருகன் 4 கிராம சுவாமிகளுடன் சந்திக்கும் உற்சவ நிகழ்ச்சி சோமரசம்பேட்டையில் நடந்தது. திருச்சி வயலூர் முருகன் கோயில் தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி முத்துக்குமார சுவாமி கோயிலிலிருந்து புறப்பட்டு உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் உள்ள அதவத்தூர் தகர கொட்டகை சென்றடைந்த பின் தீர்த்தவாரி நடந்தது. ஆற்றங்கரை மண்டபத்தில் முத்துகுமார சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு சர்வ அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி அங்கிருந்து புறப்பட்டு வரகாந்திடல், கீழவயலூர், வடகாபுத்தூர் ஆகிய கிராமங்கள் சென்றது.