திருப்புவனம், ஜன.22: திருப்புவனம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை ஏலம் ரத்து செய்யப்பட்டது. விவசாயிகள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்புவனம் அருகே லாடனேந்தல் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் உள்ளது. அங்கு அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள் காலம் கடந்துவிட்டதால் சங்கத்தின் சார்பில் நகைகளை நேற்று ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டது. ஏல அறிவிப்பு பெற்ற விவசாயிகள் கூட்டுறவு இணைப் பதிவாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து ஏலத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி ஜெயராமன் கூறுகையில், ‘‘சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளிடம் பிடித்தம் செய்துள்ள கோடிக்கணக்கான பணம் நிலுவையில் உள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அந்த பணத்தை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இந்நிலையில் கரும்பு சாகுபடிக்காக விவசாயக் கடன் பெற்ற விவசாயிகள் நகையை வைத்து கடன் பெற்று விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். காலம் கடந்த நிலையில் நகைகளை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஏலத்தில் விட்டு விடுகின்றனர். ஏலத்தை நிறுத்துங்கள் என மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கி மேலாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தோம்’’ என்றார்.
நேற்று வங்கி முன்பாக தமிழ்நாடு அரசின் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் லாடனேந்தல், கொத்தங்குளம் பகுதி விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடன் சங்கத்தை முற்றுகையிடப் போவதாக திரண்டனர். கூட்டுறவு உயர்அதிகாரிகள் நகை ஏலம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.