தஞ்சை, ஜன. 22: தஞ்சை மாவட்டத்தில் சம்பா அறுவடை தீவிரம் அடைந்துள்ளதால் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்ய வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.அன்னப்பன்பேட்டை விவசாய அணி தலைவர் செல்வராஜ் அளித்த கோரிக்கை மனுவில், அன்னப்பன்பேட்டையில் தமிழ்நாடு நெல் கொள்முதல் நிலையத்துக்கு சொந்த கட்டிடம் உள்ளது. ஆனால் அங்கு நெல் கொள்முதல் நடைபெறவில்லை. தற்போது சம்பா அறுவடை துவங்கியுள்ள நிலையில் கொள்முதல் நிலையம் செயல்படாததால் தனியார் வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு நெல்லை விலை பேசுகின்றனர். எனவே மாவட்டம் முழுவதும் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் போதிய எண்ணிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யுங்கள்: காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் அம்மையகரம் ரவிச்சந்தர் அளித்த மனு: தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளது. இந்நிலையில் தனியார் கதிர் அறுக்கும் இயந்திர உரிமையாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,900 வசூல் செய்கின்றனர். வழக்கமாக நடக்கும் அரசின் முத்தரப்பு கூட்டம் இந்தாண்டு நடத்தப்படவில்லை. இதனால் கட்டண நிர்ணயம் செய்யப்படாததால் விவசாயிகளிடம் இருந்து இஷ்டத்துக்கு கதிர் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். எனவே உடனடியாக விவசாயிகள், அதிகாரிகள், தனியார் கதிர் அறுக்கும் இயந்திர உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை கூட்டி மாவட்டம் முழுவதும் ஒரே வாடகை தொகையை நிர்ணயித்து பெற வேண்டும். மேலும் கூடுதலாக அரசு சார்பில் கதிர் அறுக்கும் இயந்திரத்தை பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.