ஆலங்குடி, ஜன.22: ஆலங்குடி அருகே ஆதிதிராவிடர் காலனியில் பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகத்தால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு கிராமங் களில் தொற்று நோய்களை தடுக்கும் விதமாக திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கும் விதமாக சுகாதார வளாகங்கள் பல கட்டப்பட்டுள்ளன. இருப்பினும் அவைகள் முறையாக பராமரிக்காததால் தற்போது அவற்றை பொதுமக்கள் பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சிக்கோட்டை ஊராட்சி, ஆதிதிராவிடர் காலனியில் பொதுமக்கள் வசதிக்காக கடந்த 2003- 2004ல் ஆண்டுகளில் சுமார் ரூ.2.50லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தில்,ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குழியலறை, துணி துவைக்கும் இடம் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டது.
இரவு நேரங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக தெருவிளக்கு மற்றும் கட்டிடத்தில் போதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் முறை யாக பராமரிக்கப்பட்டு வந்த வளாகம் பின்னர் கண்டு கொள்ளப்பட வில்லை. இதனால் சுகாதார வளாகம் முற்றிலும் பழுதடைந்தது. இந்நிலையில், இப்பகுதி பொதுமக்கள் சுகாதார வளாகத்தை மராமத்து பணிகள் செய்ய வேண்டும் என்று ஒன்றிய ஆணையிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2011-2012-ம் ஆண்டு மராமத்து பணிகள் செய்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில், தற்போது முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட சுகாதார வளாகம் பயனற்ற முறையில் கிடக்கிறது. மோட்டார் பழுதால் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுவது கிடையாது. பல வருடங்களாக சுகாதார வளாகம் பயனற்ற முறை யில் இருப்பதால், பொதுமக்கள் போதிய கழிப்பறை வசதியின்றி திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, பயனற்ற நிலையில் இருக்கும் சுகாதார வளாகத்தை, மராமத்து பணிகள் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.