திருப்போரூர், ஜன.11: சென்னைப் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்திற்கு உயர்நீதிமன்றம், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி இப்பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், மென்பொருள் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் வசிப்பவர்கள், பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் கேளம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், சென்னை மற்றும் தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம், கல்பாக்கம், கோவளம், திருப்போரூர் போன்ற இடங்களுக்கு செல்பவர்கள் கேளம்பாக்கம் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிள், கார், பஸ், தனியார் வேன்கள், ஷேர் ஆட்டோ என கேளம்பாக்கம் பிரதான சாலை எப்போதும் நெரிசலாக உள்ளது. இதைத் தொடர்ந்து வண்டலூர் சந்திப்பு மற்றும் கோவளம் சந்திப்பு ஆகிய இரு இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டது. மேலும் கோவளம் சந்திப்பில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. மற்றும் 4 போக்குவரத்து காவலர்கள் பணியில் இருந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.