திருத்தணி, ஜன. 3: சீரான குடிநீர் வழங்காத தாடூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி ஒன்றியம், தாடூர் ஊராட்சியில் தாடூர், தாடூர் காலனி, எல்.என்.கண்டிகை, இருளர் காலனி மற்றும் இ.என்.கண்டிகை ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்கு 7 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பத்துக்கும் மேற்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நிரப்படும் தண்ணீர் மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது. கடந்த ஆண்டு போதிய பருவமழை பொய்த்ததாலும், இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததாலும் மேற்கண்ட கிராமப் பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை. இதையடுத்து, இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக 2 டிராக்டர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்தது. இங்குள்ள எல்.என்.கண்டிகை கிராமத்தில் உள்ள 50 வீடுகளுக்கு கடந்த ஒரு வாரமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் தேடி காலி குடங்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு அலைந்து வந்துள்ளனர்.