குளித்தலை, டிச.28: வஞ்சிமாநகர் என எழில் கொஞ்சும் கரூர் எனும் சோழவள நாட்டில் கிருஷ்ணராயபுரம் தாலுக்காவில் அமைந்துள்ள ஏரி, குளம், நன்செய் நிலங்கள் என செழித்து விளங்கும் பஞ்சப்பட்டி என்ற ஊரின் நுழைவாயிலாக அமைந்து அருள்பாலித்து வரும் அழகுராஜ பெருமாள் கோயில் சுமார் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ராசேந்திரசோழன் காலத்தில் அருள்பாலித்து வந்த அழகுராஜ பெருமாள் கருணை விழிகளோடும் அடியார் துயர் துடைக்கும் வண்ணம் சங்க சக்கர தாரியாக அபயகரத்துடன் நின்ற கோலத்தில் சேவை சாதித்து வந்ததை இக்கோயிலின் மூலவர் சொல்லாமல் சொல்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நுழைவு வாயிலில் 20அடி உயர கொடிக்கம்பம் அதன் கீழ் அனுமன்- சிறிய திருவடி, பெரிய திருவடி என போற்றும் கருடாழ்வார் சுவாமியை பார்த்து கைகூப்பிய வண்ணம் இருவருக்கும் இடையே சங்கு சக்கரம் பொறித்த பழங்கால தட்டை வடிவ கல் பதித்துள்ளது. உட்புற நந்தவனமும் ஒரு பாழடைந்த கிணறும் பயனற்று உள்ளது.