மேலூர், டிச. 28: மேலூர் அருகில் சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை இல்லாமல் பயிர் செய்துள்ள நெல்வயலுக்குள் பிணத்துடன் இறங்கி செல்லும் அவல நிலை தொடர்கிறது.மேலூர் அருகே கச்சிராயன்பட்டி ஊராட்சியில் உள்ளது பாப்பாகுடிபட்டி. இங்கு ஒரே சமூகத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் உட்பட சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என ஊருக்கு வெளியில் தனி சுடுகாடு உள்ளது. ஆனால் அதற்கென சரியான பாதை இல்லாததால் வயல்வெளிகளில் இறங்கி தான் செல்ல வேண்டும்.விவசாயம் நடைபெறாத காலங்களில் சுடுகாட்டிற்கு செல்வதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் கண்மாய்களில் நீர் நிறைந்து விவசாய பணிகள் நடைபெறும் நேரத்தில் யாராவது இறந்து போனால் அவர்களின் சடலத்தை எடுத்து செல்வதில் மிகுந்த பிரச்சனை உள்ளது. சுமார் 300 மீட்டர் வரப்புகளில் நடந்து சென்று 700 மீட்டர் தூரம் வரை பயிர் செய்துள்ள வயலுக்குள் இறங்கி தான் செல்ல வேண்டும். நேற்று இவ்வூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி இருளாண்டி(70) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அவரின் உடலை நடவு செய்த நெற்வயலுக்குள் இறங்கி கிராம மக்கள் சுடுகாட்டிற்கு தூக்கி சென்றனர்.