கும்பகோணம், டிச. 25: தமிழக அரசு சார்பில் கோயில் யானைகளுக்கு ஆண்டுதோறும் நலவாழ்வு முகாம், கடந்த 2003 முதல் நடத்தப்படுகிறது.2019ம் ஆண்டுக்கான புத்துணர்வு முகாம் கடந்த 14ம் தேதி கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்திரகாளி அம்மன் கோயிலுக்கு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வனப்பகுதியில் பவானி ஆற்றுப்படுகையில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் பிப்ரவரி 2ம் தேதி வரை 48 நாட்கள் நடக்கிறது.கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் உள்ள மங்களம் யானைக்கு சளி பிரச்னையால் கடந்த 6 ஆண்டுகளாக முதுமலைக்கு செல்லாமல் கோயிலிலேயே வைத்து பல்வேறு சிகிச்சைகள், உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள் வழங்கி பராமரித்து வந்தனர். இந்நிலையில் இந்தாண்டும் முகாமுக்கு செல்லாததால் நேற்று யானைகள் முகாமில் இருந்து மங்களம் யானைக்கு லேகியங்கள், மாத்திரைகள், ஊட்டச்சத்து மருந்துகள், சூரணங்கள், கொள்ளு, பயிறு, கேழ்வரகு, அரிசி வழங்கப்பட்டுள்ளது.