திருவண்ணாமலை, டிச.25: திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நடந்த ரமணர் ஜெயந்தி விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை ஆராதனை நடந்தது.திருவண்ணாமலை- செங்கம் சாலையில் ரமணாஸ்ரமம் அமைந்துள்ளது. ரமணர் மதுரை அடுத்த திருச்சுழி கிராமத்தில் 1879ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன். சிறுவயதிலேயே அண்ணாமலையாரால் அருள்பெற்று திருவண்ணாமலை வந்தார். கோயிலில் உள்ள பாதாள லிங்கம் அமைந்துள்ள இடத்தில் கடும் தவமிருந்தார்.தனது தவ வலிமையால் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். பல்வேறு தத்துவங்களால் அனைவரையும் கவர்ந்த ரமணர் கடந்த 1950ம் ஆண்டு முக்தியடைந்தார். அவரது ஜீவசமாதி அவரால் தொடங்கப்பட்ட ரமணாஸ்ரமத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ரமணர் பிறந்த நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.