2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய தாய் போலீசில் விசாரணை செய்யாறு அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு

செய்யாறு, மே 16: செய்யாறு அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர். காஞ்சிபுரம் செட்டி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(35), கம்ப்யூட்டர் மெக்கானிக். இவரது மனைவி கீதா(32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கீதா கடந்த 9ம் தேதி தனது தாய் வீடான செய்யாறு அண்ணா நகர் அருகில் உள்ள கிருஷ்ணா நகருக்கு தனது 2 குழந்தைகளுடன் வந்திருந்தார். மீண்டும் தனது கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறி நேற்று முன்தினம் காலை புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் காஞ்சிபுரத்திற்கு வரவில்லை என மருமகன் சீனிவாசன், மாமனார் மூர்த்தியிடம் தெரிவித்துள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்தபோது கீதா தனது தாய் வீட்டில் கடிதம் ஒன்று எழுதிவிட்டு சென்றுள்ளது தெரியவந்தது. அதில், கணவர் வீட்டுக்கு செல்லவும், வாழவும் பிடிக்கவில்லை. என்னை தேடி ஒரு வாழ்க்கை வந்துள்ளது. அதன்படி செல்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து கீதாவின் தம்பி டில்லிபாபு என்பவர் செய்யாறு போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான கீதாவை தேடி வருகிறார்.

The post 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய தாய் போலீசில் விசாரணை செய்யாறு அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு appeared first on Dinakaran.

Related Stories: