கரூர்,டிச.20: கரூர் நகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடையில் திடப்பொருள் கழிவுகள் கலக்கப்படுவதால் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகரப்பகுதி முழுதும் பாதாள சாக்கடை திட்டம் செயல் பாட்டில் இருந்து வருகிறது. இதில், கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் இருந்து ஆஸ்பத்திரி சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது. கழிவு நீர் வெளியேறுவதும், இதனை நகராட்சியினர் அவ்வப் போது வந்து சுத்தம் செய்து விட்டு செல்வதுமான சம்பவம் இந்த பகுதியில் தொடர்ச்சியாக நடை பெற்று வருகிறது. தினமும் காலை நேரங்களில் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதும், பின்னர், 10மணியளவில் பணியாளர்கள் அதற்கான வாகனத்தில் வந்து சுத்தம் செய்வதும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காரணமாக சாலையை கடந்து சென்றாலே கடும் துர்நாற்றம் வீசும் நிலை நிலவி வருகிறது.