வலங்கைமான், டிச.16: வலங்கைமான் தாலுக்கா பகுதிகளில் வெண்ணாறு கோட்ட பாசன ஆறுகளில் தண்ணீர் வராததால் புலவர் நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தண்ணீர் இன்றி காயத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் சுள்ளன் ஆறு மூலம் நடப்பு பருவத்தில் சுமார் 14 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 தினங்களுக்கு மேலாக வலங்கைமான் பகுதியில் குறிப்பிடும் படியாக மழை பெய்யவில்லை. ஆறுகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரின்றி காயத்தொடங்கியது. தற்போது காவிரி கோட்டத்தின் கிளை ஆறுகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், வெண்ணாறு கோட்டத்தின் கிளை ஆறுகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.