திருவொற்றியூர், டிச. 11: மாநகராட்சி எச்சரிக்கையை மீறி திருவொற்றியூரில் உள்ள காலி இடத்தில் ஆயில் கழிவு கொட்டிய ரயில்வே லாரிகளை மக்கள் சிறைபிடித்தனர். திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரா நகர் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுற்றுப்பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை லாரிகள் மூலம் கொண்டு வந்து, இங்கு கொட்டப்பட்டு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த குப்பை கிடங்கு அருகே செயல்படும் தனியார் நிறுவனங்கள், தங்களது குப்பை கழிவுகளை லாரியில் கொண்டு வந்து இந்த குப்பை கிடங்கில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகி சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. எனவே, திருவொற்றியூரில் காலியாக உள்ள நிலங்களில் மாநகராட்சி அனுமதி இல்லாமல் குப்பைகளை கொட்டவோ, எரிக்கவோ கூடாது, மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டல உதவி ஆணையர் மோகன் எச்சரித்துள்ளார்.