பெரம்பலூர்,டிச.7: இளைய தலைமுறையை நல்வழிப்படுத்தும், வாழ்க்கை வழி காட்டியாக முதியோர் விளங்குகின்றனர் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா பேசினார். பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் சங்குப்பேட்டை சமுதாயக் கூடத் தில் முதியோர்கள் தினவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா தலைமை வகித்துப் பேசியதாவது :முந்தைய காலகட்டத்தில் கிராமங்களில் வாழ்ந்த குடும்பங்களில் முதியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவந்தனர். இதன் காரணமாக முதியவர்களை முறையாகக் கவனித்து வந்தனர். நாளடைவில் சமூக மாற்றத்தின் காரணமாக தற்போதைய குடும்பங்களில் வாழும் வயதான முதியவரின் நலனில் அக்கரை செலுத்துவது குறைந்துள்ளது. தம் வாழ்நாளில் பல அனுபவங்களைக் கொண்ட முதியவர்கள்தான் வாழ்வின் ஏற்றத்தாழ்வு மற்றும் நல்லதுகெட்டது விஷயங்களை முழுமையாக அறிந்து, அதற்கேற் றார்போல் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இவ்வாறு வாழ்க்கையின் பல அனுபவங்களைக் கொண்ட முதியவர்கள்தான் இன்றைய இளைய தலைமுறையை நல்வழிப்படுத்தும், வாழ்க்கை வழிகாட்டியாக விளங்கி வருகின்றனர். எனவே முதியோரை ஆரோக்கியமுடன் வாழவும் அவர்களுக்குண்டான உரிமைகளை பெறவும் நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார்.