ஊட்டி,டிச.7:முதல் சீசனுக்காக ஊட்டி ரோஜா பூங்கா தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், ரோஜா செடிகள் தற்போது கவாத்து செய்யும் பணி துவக்கப்பட்டள்ளது.
ஊட்டிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு கண்டு செல்கின்றனர். நாள் தோறும் சுற்றுலா பயணிகள் வந்தாலும், பொதுவாக கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அப்போது வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காகவும், மகிழ்விப்பதற்காகவும் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடத்தப்படுகிறது. ரோஜா பூங்காவில் நடத்தப்படும் ரோஜா கண்காட்சியின் போது, அங்குள்ள 40 ஆயிரம் செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும். 40 வகையான ரோஜா செடிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.