திருவண்ணாமலை, டிச.5: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலைமீது கடந்த 11 நாட்களாக பக்தர்களுக்கு காட்சியளித்த மகாதீபம் நிறைவடைந்தததால், தீப ெகாப்பரையை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த மாதம் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்தது. அதையொட்டி, கடந்த 23ம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 11 நாட்களாக மலைமீது மகாதீபம் பக்தர்களுக்கு காட்சியளித்தது. அதற்காக, சுமார் 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்பட்டன. தீபம் ஏற்றுவதற்காக, தினமும் அண்ணாமலையார் கோயிலில் இருந்து திரியும், நெய்யும் மலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்நிலையில், 11 நாட்களாக காட்சியளித்த மகாதீபம் நேற்று அதிகாலையுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, சுமார் 200 கிலோ எடையுள்ள செம்பினால் உருவான மகாதீப கொப்பரையை, 2,668 அடி உயர மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு திருப்பணி ஊழியர்கள் நேற்று காலை 11.30 மணியளவில் கோயிலுக்கு கொண்டுவந்து சேர்த்தனர்.