புழல், நவ. 30: காரனோடை பகுதியில் டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சோழவரம் காரணோடை முனிவேல் நகர் முதல் தெருவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதற்கு ஆரம்பம் முதல் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த கடையை திறப்பதற்காக நேற்று மதியம் 12 மணியளவில் ஊழியர்கள் வந்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முனிவேல் நகர், ஏரிக்கரை பகுதிகளை சேர்ந்த 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடை முன் திரண்டு, கடையை திறக்கக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பியபடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.