கல்வி கட்டணத்தை கையாடல் செய்ததாக சவீதா கல்லூரியை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: திருவேற்காட்டில் பரபரப்பு

பூந்தமல்லி, ஜூன் 1: கல்விக் கட்டணமாக செலுத்திய பணம் கையாடல் செய்யப்பட்டதாக சவீதா கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி பகுதியில் சவீதா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான பொறியியல், சட்டம், மருத்துவம், பல் மருத்துவம், உள்ளிட்ட ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் மாணவ மாணவிகள் சேர்ந்து விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேலப்பன்சாவடியில் உள்ள இந்த கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எம்பிஏ படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், நாங்கள் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் கல்வி கட்டணமாக ₹3 லட்சம் வரை செலுத்தி உள்ளோம்.

கல்லூரி நிர்வாகம் தெரிவித்த வங்கி கணக்கில் பணமாகவும், காசோலையாகவும், ஆன்லைனிலும் பணத்தை செலுத்தினோம். ஆனால் தற்போது ஒவ்வொரு மாணவருக்கும் ₹50 ஆயிரம் முதல் ₹2 லட்சம் வரை கல்வி கட்டண நிலுவை இருப்பதாகவும், அதனை உடனடியாக கட்ட வேண்டும், என்றும் நிர்பந்திக்கின்றனர். கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என்று கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். இதனைக் காரணம் காட்டி கடந்த 2 வாரங்களாக வகுப்புகள் நடைபெறவில்லை.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, கல்வி கட்டண தொகையை செலுத்திய போது பணியில் இருந்தவர்கள், கட்டணம் வசூலித்தவர்கள் கல்லூரியை விட்டு நின்று விட்டதாக தெரிவிக்கின்றனர். நாங்கள் கல்லூரி நிர்வாகம் கூறிய வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளோம்‌. ஆனால் அதற்கான ரசீதும் வழங்கவில்லை. எங்களிடம் கட்டணம் வசூலித்தவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று செலுத்துமாறு பொறுப்பில்லாமல் கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.

நிலுவையில் உள்ள தொகையை செலுத்த வேண்டும். அப்போது தான் வகுப்புகள் நடைபெறும். தேர்வு எழுத முடியும் என்று கல்லூரி நிர்வாகம் மிரட்டி வற்புறுத்தி வருகிறது. மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூலித்தவர்கள் கல்லூரியில் உயர் பொறுப்பில் இருந்தவர்கள். அவர்கள் பணம் கையாடல் செய்து விட்டதாக தெரிகிறது. அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் மாணவர்களை மீண்டும் கட்டணம் செலுத்துமாறு சொல்வது எந்த வகையில் நியாயம். இதனால் எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் மிகப்பெரிய கல்விக் குழும நிறுவனத்தில் வசூலித்த கல்விக் கட்டணத்தை மீண்டும் செலுத்துமாறு கூறி முறைகேடாக மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகின்றனர். கட்டணத்தை வசூல் செய்து விட்டு அதனை எடுத்து சென்ற ஊழியர்கள் மீது அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தங்களது கல்வி பாதியில் நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டு விடும், என்று புகார் தெரிவித்தனர். இதையடுத்து திருவேற்காடு போலீசாரும், கல்லூரி நிர்வாக ஊழியர்களும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து, மாணவர்கள் ஆர்பாட்டைத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணத் தொகையை செலுத்தவில்லை என கல்லூரி நிர்வாகம் கூறியதால் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கல்வி கட்டணத்தை கையாடல் செய்ததாக சவீதா கல்லூரியை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: திருவேற்காட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: