திருச்சி, நவ.28: பூலோக வைகுண்டம் எனப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படும். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் 7ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்குகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 18ம் தேதி நடைபெற உள்ளது. பகல் பத்து டிசம்பர் 8ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடைபெறும். விழா நாட்களில் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருள்வார். பகல்பத்தின் கடைசி நாளான 17ம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் காட்சியளிப்பார். தொடர்ந்து ராப்பத்து முதல் நாளான 18ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி விழா நாட்களில் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ராப்பாத்து நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வான 24ம் தேதி திருக்கைத்தல சேவையும், 25ம் தேதி திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சியும், 27ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 28ம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமுறையும் நடைபெற உள்ளது.