மயிலாடுதுறை,நவ.28: மயிலாடுதுறை சீர்காழி சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் பாதை வள்ளாலகரம் பகுதியில் செல்லும் வாகனங்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்கின்றன, மயிலாடுதுறை நகருக்குள் நுழையும் போது 3 கி.மீ., தூரத்திற்கு பெரிய அளவில் வளைவுகள் இல்லை. இதனால் வாகனங்கள் கண் மூடித்தனமாக படு வேகத்தில் செல்கின்றன. மாருதி கார் விற்பனையகம் முன் ஒரு வேகத்தடை போடப்பட்டுள்ளது, அந்த பகுதியில் வாகனங்கள் எடுக்கும் வேகம் மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதிவரை தொடர்கிறது, இதற்கிடையே சிவப்பிரியா நகர் என்ற இடத்தில் அரசு போக்குவரத்துக்கழம் அறிவித்துள்ள பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது, அதையடுத்து தனியார் நர்சரி பள்ளிக்கு செல்லும் வழி பிரிகிறது, இவ்வாறு 3 கி.மீ தூரம் வரை முக்கியச்சாலையில் வாகனங்கள் வருகின்றன. அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் பேருந்துகள் செல்லும் வேகத்தால் பாதசாரிகளும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் தடுமாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.