ஆவடி, நவ.21: ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த ஷேர் ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து எரிந்தது இதனை பார்த்த டிரைவர், ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடி உயிர் பிழைத்தார். ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அபினாஷ்(25). சொந்தமாக ஷேர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அபினாஷ் சவாரி முடித்துவிட்டு பூந்தமல்லியில் தங்கியுள்ளார். பின்னர், நேற்று அதிகாலை 4.30மணி அளவில் ஆட்டோவை ஆவடி நோக்கி ஓட்டி வந்தார். ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலை, பருத்திப்பட்டு அருகில் வந்தபோது நடு ரோட்டில் ஆட்டோ திடீரென்று பின்பக்கம் தீபிடித்து எரிந்தது. இதனை பார்த்த, அவர் ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓடியதால் உயிர் பிழைத்தார். பின்னர், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆட்டோவில் பற்றிய தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவல் அறிந்ததும் ஆவடி, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோவில் பற்றிய தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும், ஆட்டோ முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ தீப்பிடித்து எரிதற்காக காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.