வாக்காளர் விழிப்புணர்வு மெகா கோலப் போட்டி

பூந்தமல்லி: திருவேற்காட்டில் வாக்காளர் விழிப்புணர்வு மெகா கோலப் போட்டி நடைபெற்றது. வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் பொருட்டு, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோலப்போட்டியில் கலந்து கொண்ட மகளிர் குழுவினர் வரைந்த கோலங்களில் சிறந்த கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படும். இதனை தொடர்ந்து, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட நான்கு மகளிர் குழுக்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்ற மெகா கோலப்போட்டி நேற்று நடந்தது.

இதில், திருவேற்காடு பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த கோலப்போட்டியில், வாக்காளர் வலிமை தேசத்தின் பெருமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, என் வாக்கு என் உரிமை, மாற்றுத்திறனாளிகளை 100 சதவீதம் வாக்களிக்க செய்தல் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய, ரங்கோலி கோலங்கள் வரைந்திருந்தனர். இந்த போட்டிகளை நகர மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நகர மன்ற துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், திருவள்ளூர் தெற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் லயன் ரமேஷ், நகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கோலங்களை வரைந்த மகளிர் குழுக்களை சேர்ந்தவர்களுக்கு ஊக்கப்பரிசுகளை நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் வழங்கினர்.

The post வாக்காளர் விழிப்புணர்வு மெகா கோலப் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: