செம்பட்டி, நவ. 20: செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், வண்ணம்பட்டி, வீரக்கல் உள்ளிட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்தது. அறுவடை செய்யும் நிலையில் இருந்த பயிர்கள் அனைத்தும் கஜா புயலால் முற்றிலும் நாசமடைந்தன. குறிப்பாக எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகளின் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இதன் சேத மதிப்பு ரூ.6 கோடி என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேதமடைந்த பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு சேத மதிப்பை கணக்கிட்டுள்ளனர். இந்நிலையில் எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், வண்ணம்பட்டி, வீரக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த பயிர்களை திமுக துணை பொதுசெயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ பார்வையிட்டு, விரைவில் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். ஆய்வின்போது ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், அவைத்தலைவர் காணிக்கைசாமி, எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி கழக செயலாளர் வாஞ்சிநாதன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர், மல்லையாபுரம் சக்திவேல் உள்பட பலர் இருந்தனர்.