ஊட்டி, நவ. 16: அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. கோடை சீசனின் போது, ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இவர்களை, மகிழ்விப்பதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்கா ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காக்களில் காய்கறி கண்காட்சியும் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இதுதவிர கூடலூரில் வாசனை திரவியக் காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது. இதில், ஊட்டி தவாரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால், ஆண்டு தோறும் தாவரவியல் பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்த மலர் செடிகளில் ஏப்ரல் இறுதி வாரம் முதல் பூக்கள் பூத்து குலுங்கும். மே மாதம் இரண்டாவது வாரத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது பல வகையான செடிகளில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல், மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட தொட்டிகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களும் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், 2019ம் ஆண்டு மே மாதம் நடக்குவுள்ள மலர் கண்காட்சி மற்றும் கோடை சீசனுக்கான விதைகள் சேகரிப்பு பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது.