பெரம்பலூர், நவ.15:வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வை மாணவ, மாணவிகள்தான் ஏற்படுத்த வேண்டும் என்று பெரம்பலூரில் நடந்த பள்ளி விழாவில் சார்பு நீதிபதி
வினோதா கூறினார். பெரம்பலூர்-அரியலூர் சாலையிலுள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா கலந்துகொண்டு பேசியதாவது: மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் மண்ணுக்கு கேடுதான் ஏற்படுகிறது. புவி வெப்பமடைந்து, காற்று மண்டலத்தில் இருந்தபடி பூமியிலுள்ள உயிர்களைப் பாதுகாக்கின்ற ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்தால் அகச்சிவப்பு, புறஊதா கதிர்கள் புவியை நேரடியாக தாக்கி, ஒட்டுமொத்த உயிரினங்களும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாதென்ற விழிப்புணர்வை மாணவ, மாணவியர்தான் ஏற்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில், ஓட்டல்களில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். துணிப்பைகளையும், சில்வர் டம்ளர்களையும் பயன்படுத்தி முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.