புதுக்கோட்டை, நவ.15: புதுக்கோட்டை மாவட்டத்தில் இறால் பண்ணைகள் பதிவுச்சான்று பெறவும் மற்றும் பதிவு சான்றின் உரிமத்தை புதுப்பித்திடவும் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உவர்நீர் இறால் பண்ணைகளுக்கும் கடல்சார்நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தின் வாயிலாக உரிய பதிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் 2005-ன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு உவர்நீர் இறால் பண்ணைகளும் உரிய பதிவின்றி செயல்படக்கூடாது என இதன் வாயிலாக எச்சரிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் 2005ன்படி அதிகப்பட்சமாக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உவர்நீர் இறால் பண்ணைகளுக்கு பதிவுச்சான்று ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பதிவுச்சான்றின் உரிமத்தினை புதுப்பிக்க வேண்டியது அவசியம்.