போதை வாலிபர் ஓட்டிய கார் மோதி பெண் சாவு

வி.கே.புரம், நவ. 14: பாபநாசத்தில் குடிபோதையில் வாலிபர் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 2 வேன்கள் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டம் அம்மையார்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், தனது மகன் சக்திமாரிக்கு திதி கொடுப்பதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வேனில் பாபநாசத்துக்கு வந்தார். கோயில் மேற்புறத்தில் வேனை நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர். அப்போது அவ்வழியாக தாறுமாறாக வந்த கார், இவர்கள் மீது மோதியதுடன், அருகில் நின்றிருந்த 2 வேன்கள் மீதும் மோதிவிட்டு நின்றது. இச்சம்பவத்தில் கிருஷ்ணசாமி மனைவி கிருஷ்ணம்மாள் (45), மகன் பிரகலதாபன் (11) மற்றும் இதே ஊரை சேர்ந்த சந்திரன் மனைவி ஜக்கம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக இவர்கள் மூன்று பேரும் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணம்மாள், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாலையில் இறந்தார். விபத்து குறித்து வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டியவர், பாணான்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் முனியராஜ் (25) என்பதும், தனது உறவினர் திதிக்காக வந்ததும் தெரிய வந்தது. டிரைவிங் தெரியாத இவர், குடிபோதையில் டிரைவரிடம் சாவியை வாங்கி காரை எடுத்துக் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், முனியராஜை கைது செய்தார்.

Related Stories: