நெல்லை கோயில்களில் சூரசம்ஹார விழா

நெல்லை, நவ.14: நெல்லை சந்திப்பு பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயில், குறுக்குத்துறை கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கடந்த 8ம்தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. சூரசம்ஹார விழாவான நேற்று காலை குறுக்குத்துறை, சாலைகுமரன், நெல்லையப்பர் கோயில் ஆறுமுகர் சன்னதி, பாளை சிவன் கோயில் சுப்பிரமணியர் சன்னதிகளில் மூலவர், உற்சவருக்கு 21 வகையான திரவிய அபிசேகமும், சண்முகா அர்ச்சனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி சாலைகுமரன் கோயில் சுப்பிரமணியர் சந்திப்பு ரயில் நிலைய சாலை, சிந்துபூந்துறை சிவன் கோயில், செல்வி அம்மன் கோயில் அருகே, மேகலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 தொடர்ந்து இன்று காலையில் அம்மன் தபசு காட்சி, இரவு 11 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இதையடுத்து மூன்று நாட்கள் சுவாமி, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

இதேபோல் குறுக்குத்துறை சுப்பிரமணிய கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி காலை யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் கோயில் ரதவீதியில் சூரசம்ஹாரம் நடந்தது. இன்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. நெல்லையப்பர் கோயில் ஆறுமுகர் சன்னதி காலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதைெதாடர்ந்து சுப்பிரமணியர் வடக்கு வாசல் வழியாகவும், சண்முகர் சுவாமி சன்னதி வழியாகவும் எழுந்தருளினர். பின்னர் டவுன் போலீஸ் நிலையம், கூலக்கடை பஜார், லாலா சத்திரமுக்கு, போத்தீஸ் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் சூரசம்ஹாரம் நடந்தது. இன்று இரவு 8 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இதுபோல் வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணியர் கோயில், பாளை. மேலவாசல் முருகன் கோயில், சிவன்கோயில் சுப்பிரமணியர் சன்னதி, தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில் சுப்பிரமணியர் சன்னதி, மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாதர் சுப்பிரமணியர் சன்னதி உள்ளிட்ட கோயில்களில் காலையில் சிறப்பு வழிபாடும், மாலையில் சூரசம்ஹாரமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: