திருவள்ளூர், நவ. 8: கேதார கவுரி விரதத்தையொட்டி நேற்று கோயில்களில் கேதாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டு நோன்பு பலகாரம் வைத்து வழிபட்டனர்.சிவனுக்குரிய அஷ்ட மகா விரதங்களில் கேதார கவுரி விரதம் மிகவும் முக்கியமானதாகும். சக்தி ரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து சிவனின் உடம்பில் ஐக்கியமாகி அர்த்தநாரியாக பாதி உடம்பை பெற்ற விரதமாகும். இந்த நோன்பு ஐப்பசி மாத அமாவாசையில் வருகிறது.தீபாவளி மறுநாளில் ஐப்பசி அமாவாசையன்று கும்பம் வைத்து காமாட்சி அம்மன் விளக்கேற்றி பழவகைகள், பூக்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு இனிப்பு வகைகள் வைத்து படைப்பார்கள். அப்பமும், அதிரசமும்தான் இதில் முக்கிய இனிப்பு வகைகள் ஆகும்.
நோன்பு சட்டியில் 21 அதிரசம் வைத்து அதனுடன் நோன்பு கயிற்றையும் வைப்பார்கள். பூஜை முடிந்த பிறகு, வந்திருப்பவர்களுக்கு பிரசாதமும், நோன்புக் கயிறும் கொடுத்து உபசரிப்பார்கள். பக்தி சிரத்தையுடன் கேதார கவுரி விரதம் இருந்து பூஜை செய்யும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்யம் உண்டு என்பது ஐதீகம்.