தங்களது குழந்தைகளுக்கு சிறுவயது முதலே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்

பெரம்பலூர், நவ.2:  பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியம், சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது. சிக்கனமும், சேமிப்பும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. சிக்கனமாக வாழ்ந்தால் தான் சேமிக்க இயலும். சேமித்தால் தான் மனிதனின் நிகழ்கால தேவை மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து அவர்களது சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

 தமிழ்நாட்டு மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தை தமிழக அரசின் சிறுசேமிப்புத்துறை, மத்திய அரசின் அஞ்சலகத்துறை இணைந்து செயல்படுத்துகிற 100 சதவீதம் பாதுகாப்பானதும், அதிக வட்டியளிக்கக்கூடியதுமான அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் அந்த தொகைக்கு உத்தரவாதமும், எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பும் கிடைக்கும். இந்த உலக சிக்கன நாளில் அஞ்சலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: