ஊட்டி, நவ. 2: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், கடை வீதிகள் போன்ற பகுதிகளில் குற்றங்களை தடுக்க இம்முறை ஊட்டி மற்றும் கூடலூரில் வாட்ச் டவர் (கண்காணிப்பு கோபுரம்) அமைக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் பொருட்கள், ஆடைகள் வாங்க தற்போது மும்முரம் காட்டி வருகின்றனர். தனியார் தேயிலை தோட்டங்கள், தனியார் நிறுவனங்கள், போனஸ் கிடைத்துள்ள நிலையில் தற்போது ஊட்டி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் மக்கள் புத்தாடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்கும் பணிகளை துவக்கியுள்ளனர். இது போன்ற சமயங்களில் பிக்பாக்கெட், செயின் பறிப்பு, புத்தாடைகளை திருடி செல்லுதல், வாடிக்கையாளர்கள் போன்று வந்து கடைகளில் ஆடைகள் மற்றும் பொருட்களை திருடி செல்லுதல் போன்ற சம்பவங்கள் அரங்கேறும். இதனை தடுக்க மாவட்ட காவல்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.